https://www.facebook.com/share/p/1AJMXpJmSE/
‘‘ஒரே கேள்வி...’’ என்றார் ஆந்திர பிரபா எனும் ஊடகத்தின் நிருபர்.
‘‘கேளுங்கள்’’ என்றார் சுமிதா.
நிருபர் : இப்போது தமிழ், தெலுங்கு, படங்களில் நீங்கள் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலிக்கிறீர்கள். கதாநாயகர்கள் கூட உங்களுக்காகக் காத்திருக்கும் அளவுக்கு நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள். நினைத்ததை எல்லாம் நீங்கள் பெறமுடியும். இப்போதும் கூட உங்களுக்கு நிறைவேறாத ஆசை என்று ஏதாவது இருக்கிறதா?
சுமிதா : ஆசைப்படாதவர் யார்? ஆசைப்பட்டதை எல்லாம் அடைந்தவர் யார்? எனக்கும் ஒரு ஆசை இருந்தது. ஒரே ஓர் ஆசைதான். நான் ஒரு ‘நக்சலைட்’ ஆக வேண்டும் என்று எனக்குள் ஆசை வளர்த்தேன். அது நடக்கவில்லை. நாளும் நாளும் நெருங்கிய பிரச்சினைகளின் அலைகள் மோதி மோதி என் வாழ்க்கை திசைமாறிப் போனது. ஆனால், அந்த நெருப்பு என் நெஞ்சில் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது!
நிருபர் : புகழின் வெளிச்சத்தில் நடக்கும் எந்த அழகியும் இப்படி ஆசைப்பட மாட்டார். விநோதமாய் இருக்கிறது.
நக்சலைட் ஆக வேண்டுமென்றா ஆசைப்பட்டீர்கள்..?
(ஒரு கவர்ச்சி நடிகையிடம் இருந்து இப்படியொரு பதில் வரும் என்று நிருபர் எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை)
சுமிதா : ஆம். உங்களுக்குச் சந்தேகமா?
நிருபர் : நக்சலைட் என்றால் என்ன? யார் என்று உங்களுக்குத் தெரியுமா ? மேடம்...
நக்சலைட் என்றால் அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளி...
சுமிதா : (ஒரு பெருமூச்சு விட்டவாரே தொடர்கிறார்...) ‘‘அரசாங்கத்தால் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நம்மைவிட, தேடப்படும் குற்றவாளிகள் சுதந்திரமானவர்கள் என்றல்லவா நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்!’’
(நிருபர் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தார்)
சுமிதா : இங்கே ஒரு வேடிக்கையான முரண்பாடு துருத்திக்கொண்டிருக்கிறது. பலவீனமானவர்கள்தான் சர்வாதிகாரிகளை உருவாக்குகிறார்கள்.
சர்வாதிகாரிகள் தான் அப்பாவிகளைக் கூட ஆயுதம் தூக்க வைக்கிறார்கள்...
நிருபர் : (தனது குறிப்பேட்டை மூடிவிட்டு...) நீங்கள் சொன்னதை எல்லாம் நான் எழுதலாமா?
சுமிதா : உங்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் உங்களை அனுமதிக்கும் வரை எழுதலாம்.!
No comments:
Post a Comment