Thursday, October 9, 2025

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் குறித்து பெரியார்...

 கேள்வி: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் குறித்து உங்கள் பார்வை என்ன..?


பெரியார்:


பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை,

ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நான்கு அக்கா, தங்கைகள் என்று கருதுகிறார்கள். 

இது பித்தலாட்டம் என்பதுதான் என் கருத்து. 


இந்தத் திராவிடத் தாய்க்குப் பிறந்தது ஒரே மகள் தான்.‌ அது தமிழ்தான்!


கேள்வி: 

அப்படியானால் தமிழில் இருந்து தானே மீதி மூன்று மொழிகளும் பிறந்திருக்க வேண்டும்?


பெரியார்: 

நான்கு பெயர்களில்  வழங்கப்பட்டாலும் 

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் நான்கு இடங்களிலும் பேசப்படுவது 

தமிழ் ஒன்று தான். 


நாலும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு. 

ஒன்று தான் நான்காக நமது அறியாமையால் கருதப்பட்டு வருகிறது.


கேள்வி:  

மொழி அறிஞர்கள் கூடவா இப்படி அறியாமையில் இருந்திருப்பார்கள்?


பெரியார்: 

போக்குவரத்து  வசதி இல்லாத, 

ஒருவருக்கொருவர்  தொடர்பு இல்லாத அந்தக் காலத்தில் 

அந்தந்த மண்ணின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப 

தமிழ் உச்சரிப்பில் சில மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. 


நம்மை நாலு ஜாதியாக பிரித்து வைத்த ஆரியம், 

நம் மொழியையும் நான்காகப் பிரித்து வடமொழியை புகுத்தி, திராவிட மொழியையே கெடுத்துவிட்டது. 


அன்றைய பண்டிதர்கள் ஆரியத்திற்கு 

அடிமைப்பட்டு இருந்ததால் அதைத் தடுக்கவில்லை. 


இன்று வரையும் நமது பண்டிதர்களுக்கு அந்த ஆரிய மோகம் தீர்ந்தபாடில்லை.


கேள்வி: 

வடமொழியால் கெட்டதாகச் சொல்கிறீர்களே... 

அந்த திராவிட மொழி எது?


பெரியார்: 

திராவிடமொழி தமிழ் தவிர வேறு இருக்க முடியாது.


கேள்வி: உங்கள் கருத்தை‌ மற்ற மூன்று மொழிக்காரர்களும் ஏற்பார்களா?


பெரியார்: ஆரிய மோகம் அற்ற ஒரு 

தெலுங்கு பண்டிதர்,

ஒரு கன்னடிய பண்டிதர், ஒரு மலையாள பண்டிதர், ஒரு தமிழ்ப் பண்டிதர் ஆகிய நால்வரும் ஒன்றாக உட்கார்ந்து 

நாலு மொழி அகராதிகளையும் வைத்துக் கொண்டு, அவற்றில் உள்ள வடமொழி வார்த்தைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் 

எஞ்சி இருப்பது தமிழ் வார்த்தைகள்தான் என்பதையும் 

100 க்கு 5 வார்த்தை கூட தமிழ் அல்லாத வார்த்தைகள் இருக்காது என்பதையும் உணர்வார்கள்.


கேள்வி:

 மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகள் தமிழ்தான் என்று நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம்?


பெரியார்:


 தமிழில் 'வீடு' என்பதை 

தெலுங்கர் 'இல்' என்றும்,

கன்னடர்'மனை' என்றும், 

மலையாளி 'பொறை' என்றும் கூறுவார்கள். 


தமிழில் 'தண்ணீர்' என்பதை தெலுங்கர் 'நீளு' என்றும், கன்னடர் 'நீரூ' என்றும், மலையாளி 'வெள்ளம்' என்றும் கூறுவார்கள்.


நாம் 'எனக்கு' என்று கூறுவதை 

தெலுங்கர் 'நாக்கு' என்றும், 

கன்னடியர் 'நெனக்கி' என்றும், 

நாம் 'பசு' என்பதை தெலுங்கர் 'ஆவு' என்றும், 

கன்னடர் 'அசு' என்றும், 

மலையாளி ''ஆவ்' என்றும் 

கூறுவார்கள். 


நாம் 'அங்கே' என்பதை ஒருவன் 'அவடே' என்றும், ஒருவன் 'அக்கடே' என்றும் கூறுவர்.


நேக்கு,  நோக்கு, அவாள், இவாள் என்று பேசுவதெல்லாம் தமிழ் என்று கூறும் போது 

நாக்கு, நெனக்கி, எனக்கி, இல், மனை, பொறை, நீளு, வெள்ளம் என்று கூறும் மக்களைத் தானா வேறுமொழி பேசுபவர்கள் என்று ஒதுக்க வேண்டும்? 


ஆகவே தான் நான் கூறுகிறேன். 

இவை நான்கும் நான்கு இடத்தில் நான்கு பெயருடன் வழங்கப்பட்டு வரும் ஒரே மொழியே தவிர நான்கு அல்ல. 


ஆரியம் தான் இவற்றை நான்காக பிரித்து வைத்துள்ளது. 

இந்த  ஆரியத்திற்குக் கையாளாக இருப்பவர்கள்தான் தம் அறியாமையால் இப்பிரிவினைக்கு ஆக்கம் விளைவிக்கிறார்களே ஒழிய 

உண்மையில் இவை நான்கும் ஒன்றுதான். 


சுயநலம் மறந்து, உண்மை மொழிப்பற்று கொண்டு ஆரிய வட சொற்களை நீக்கிப் பார்த்தால் இவை நான்கும் ஒரே மொழிதான் என்பது தீர்க்கமாய் விளங்கும்.


கேள்வி: ஆக நான்கு மொழிகளும் தமிழ்தானா?


பெரியார்:

இவை நான்கும் ஒரு உதிரத்தில் இருந்து உதித்து எழுந்தது அல்ல 

அந்த உதிரமேதான் இவை நான்கும் 


என்னருந் தமிழே! 

நீயேதான் தெலுங்கு, 

நீயேதான் மலையாளம், 

நீயேதான் கன்னடம் என்றுதான் நான் கூறுவேன். 


இவை வெவ்வேறு மொழிகளாய் இருந்தால் இவைகளுக்கு முதல் நூல்கள் எங்கே? 


தமிழுக்குத் தான் முதல் நூல்கள் எத்தனை உள்ளன? 


அத்தனையும் ஆடிப்பெருக்கத்தில் ஒழித்த ஆரியக் கூட்டமும், 

அவர்களின் அடிவருடிகளும் தானே 

இன்று தமிழ், தமிழ் என்று கூப்பாடு போடுகிறார்கள்?


கேள்வி: உங்கள் கருத்தால் தமிழுக்குக் கேடு வராதா?


பெரியார்: 

உண்மையாகத் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் 

பாடுபடுபவர்கள் திராவிடர் 

கழகத்தார்கள் தான். 


நாங்கள் திராவிட நாடு, திராவிட மொழி என்று கூறும்போது 

மொழி போச்சு, மொழி போச்சு என்று கூப்பாடு போடும் தோழனே! 


எங்கள் முயற்சியால் எதுபோகும்? 


உங்கள் அறியாமை வேண்டுமானால் போகுமே ஒழிய உண்மையில் தமிழுக்கோ, தமிழ்நாட்டிற்கோ கடுகு அளவேனும் கேடு வருமா?


(10.01.1948 - 'குடிஅரசு' இதழில் பெரியார் எழுதிய 'மொழி ஆராய்ச்சி' கட்டுரையின் ஒரு பகுதி)

No comments: