Thursday, December 13, 2012

எமது ஊர் பாதுகாவலி லூசியாள்!

நாளை எமது ஊர் பாதுகாவலி லூசியாள் விழா திருப்புகழ்மாலை! அதற்கு தலைமை தாங்க அழைத்திருக்கிறார்கள். பெருமையாக, கௌரவமாக நினைக்கிறேன், செல்கிறேன். அதற்கென முன்னுரை ஓன்று வேண்டும், இதோ அது:



கருத்து: "நம்பிக்கையில் ஆழப்படவும் சான்று பகரவும் மறைசாட்சிகளை அறிதல்" மறையுரையில் இது பேசப்ப்படுமாதலால் ஊர் சார்ந்த, உறவு சார்ந்த, உணர்ச்சிபூர்வமான விஷயங்கள் எடுத்துரைத்து ஒற்றுமைக்கு அறைகூவல் விடுக்கலாம் என்று நினைக்கிறேன்:


உடலில் எத்தனையோ உறுப்புக்கள் இருந்தும், அதை உடல் என்றோ, ஏதாவது ஒரு உறுப்பு என்றோ நாம் அழைப்பதில்லை, காரணம் அதற்கு ஒரு பெயர் இருக்கிரதுக்கிறது. அதைத்தான் நாம் ஆளுமை என்றோ ஆன்மா என்றோ அழைக்கிறோம். நமது ஊரின் அத்தகைய ஆன்மாவை நாம் தெரிந்துகொண்டோமா? இதை தெரிந்தாலன்றி வளர, உயர, முன்னேற முடியாது, பெருமைப்படமுடியாது.


இப்படியே நாம் 'மீனவன்' என்றோ 'தமிழன்' என்றோ 'இந்தியன்' என்றோ எல்லாம் அழைக்கபடுகிறோம். இது பிறரை பகைத்துக்கொள்ள அல்ல, போட்டி போட்டுகொள்ளவல்ல; மாறாக பங்கிட்டு, பங்கேற்று வாழ, பிறருடன் சேர்ந்து வாழ.


இதைத்தான் ஓரிரு மாதங்களுக்கு முன் நம்மூர் இளைஞர்கள் 'நண்பர்கள் குழாம்' என்ற பெயரில் ஒரு பிட் நோட்டீஸ் பிரசுரித்து ஊர் ஒன்றுபட, ஊரின் உயர்வுக்கு பாடுபட முன்வர சவால் விடுத்துள்ளார்கள். அதை ஏற்போம், முன்னேறுவோம், பிறருக்கு முன்மாதிரியாயிருப்போம்.


'யானைக்கு பலம் தும்பிக்கையில் , நமக்கு அது நம்பிக்கையில்.' மேலும் 'நம்பினார் கெடுவதில்லை' என்று நான்கு மறை தீர்ப்பும் அளிக்கின்றது. நம்பிக்கை நிச்சயம் வேண்டும். இதை ஆழப்படுத்த, நல்வாழ்க்கைக்கு சான்று பகர மறைசாட்சியரை அறிதல் வேண்டும் என்று சிந்திக்க இருக்கின்றோம். மறைசாட்சியர் தங்களது சுயநலத்துக்காகவன்றி உயர் மதிப்பீடுகளுக்காக வாழ்ந்தவர்கள். இது எந்த ஒரு மறை சார்ந்ததல்ல, மாறாக இறையரசு சார்ந்தது, நற்செய்தி சார்ந்தது. அதை சாற்றுவோம், போற்றுவோம்.


'வீழ்ந்தால் விதையாக வீழ்வோம், எழுந்தால் கதிரவனாய் எழுவோம்.' லூசியாள் நமக்கு துணைவருவாள், துணிந்து செல்வோம், வெல்வோம் இறையரசை.