அம்மா...
ஆம், அம்மா நினைவாகி பத்தாண்டுகள்...
அம்மாவின் பிள்ளைகள் நால்வர்
இறந்தது தலைப் பிள்ளை
தத்தெடுத்தது இன்னொரு பிள்ளையை...
இன்று அவர்கள் நால்வரும் அவரவர் வழியே...
அம்மா மறைவின்
இந்த பத்தாவது ஆண்டிலேனும்
அவர்கள் ஒன்று சேரமாட்டார்களா,
அம்மா ஏங்கியிருப்பாள்...
அப்பா இருந்தபோதும்
இல்லாதபோதும்
எல்லாமுமாக எமை காத்தது,
வளர்த்தது எல்லாம் அம்மாவன்றோ?
"கண்கண்ட தெய்வமான"
'அம்மையப்பன்' இப்படி,
பெயரளவில் எத்தனை காலம்...
இரண்டாவது தலைமுறைக்கே
அம்மாவுடன்
ஆழமான, உணர்ச்சி பூர்வமான
உறவு இருந்தது சந்தேகமே..
அம்மாவுக்கும் ஆசைகள் இருந்திருக்காதா
'ஈரமான ரோஜா' போல!
அப்படி ஏதேனும் இருந்திருந்தால்
அதை புரிந்துகொள்ளவாவது முயற்சித்தோமா...
புரிந்துகொண்ட வற்றை
நிறைவேற்றவேனும் முன்வந்தோமா?
ஏன், அம்மாவையே நாம்
சரிவர புரிந்திருக்கவில்லையே!
உறவுகள் ஊசலாடுகிறதோ...
அது சிதைந்து உடைந்து போகாமலிருந்தாலாவது
அம்மா ஆறுதல் அடைவாள்...
"தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை
தந்தைசொல் மிக்க மந்திரமில்லை."
நாம் எப்படியோ, அம்மா ஒரு கறையற்ற விசுவாசி,
குறிப்பாக அன்னை மரியிடம்...
அம்மா இறந்த நாள்
அன்னை மரியின் அரசித்துவ நாள்...
ஆக, அம்மாவும் மறு வாழ்வில் அரசியான நாள்...
அம்மாவின், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,
அவர்கள் பிள்ளைகள் அனைவருக்கும் நன்றி...
No comments:
Post a Comment